லெட்டர் பேட் கட்சி.. டைம் வேஸ்ட்.. திருமுருகன் காந்தி பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல்
சென்னை: ட்விட்டர், லெட்டர் பேட் கட்சிக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தை நடத்தினர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து விட்டு அவரவர் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
சீச்சீ.. நிர்வாணமாக பெண்கள் முன்பு நின்ற போலீஸ்காரர்.. அதிர்ச்சி செயலால் கொந்தளித்த மக்கள்
மாறி மாறி பேசிய திமுக
இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை, அப்போது அவர் இந்த போராட்டத்தை சந்தர்ப்ப வாதம் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், பெட்ரோலிய பொருட்கள் விலை குறையும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் வற்புறுத்தினார். இப்போது ஆளும் கட்சியாக வந்த பிறகு, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வரக் கூடாது என்று தமிழக அரசு கூறி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஸ்டாலின் விவரம் தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட்டார் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூற வருகிறாரா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
போராடுவது நல்லது
தமிழ்நாடு அளவிலே இங்கே இருக்கக்கூடிய ஆளும் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் நடத்திய கருப்புக் கொடி போராட்டம் எந்த விதத்திலும் கூட நியாயத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய செயல் கூட கிடையாது. அனைத்தும் கூட பொய்யான விஷயங்களை முன்னெடுத்து பொய்யான விஷயங்களை சொல்லி இருக்கின்றார்கள். அடுத்த 11 நாட்கள் போராட்டம் நடக்கும் என்று சொல்கின்றார்கள். அது ஒரு விதத்தில் நல்லதுதான். இவர்கள் நடத்த நடத்த, உங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு எங்களால் உண்மையை சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
திருமுருகன் காந்தி பற்றி அண்ணாமலை
இதனிடையே, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, மேகதாது விவகாரம் தொடர்பாக, அண்ணாமலை, ஒரு அரசியல் தலைவரே இல்லை.. அவர் கர்நாடகாவிற்கு சென்று போராட்டம் நடத்த தயாராக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாரே, என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "எனக்கு தெரியலிங்க.. இந்த மாசம் பேரு.. நாள் பேரில் கட்சி ஆரம்பித்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. நாங்கள் ஒரு தேசிய கட்சி. 18.5 கோடி உறுப்பினர்களை கொண்ட பெரும் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி. பல மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சி. எனவே, ட்விட்டர், லெட்டர் பேட் கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை." என்று தெரிவித்தார் அண்ணாமலை.
நீட் தேர்வு
மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. கல்வி தொடர்பாக நான் கேட்ட வெள்ளை அறிக்கை பற்றி பேச்சு மூச்சு இல்லை. 2006 லிருந்து 2015 வரையிலான டேட்டாவை வெளியிடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இந்த காலகட்டத்தில் வெறும் 190 பேர் தான் அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். ஆனால் நீட் வந்த பிறகு அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்த டேட்டாவை இவர்கள் வெளியே சொல்வது கிடையாது. மொத்தமாக அனைத்து வகை பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் பற்றிய ஒரு டேட்டாவை வெளியிட்டு வருகிறார்கள். எனவேதான் மாணவர் சேர்க்கை தொடர்பான வெள்ளையறிக்கையை கேட்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.