என்னது .. தமிழக பாஜக தலைவராக எஸ்.வி.சேகரா.. பரபரக்கும் கிசுகிசு
தமிழக பாஜக தலைமை விரைவில் மாறும் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழக பாஜக தலைமை மாற்றப்படும் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
மாநில தலைமை பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ஏற்று 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் பாஜக தலைமை தமிழிசை மீது அதிருப்தியாக இருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கு முக்கிய காரணமாக மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி திருப்திகரமாக இல்லை என கூறப்பட்டது.
ஆர்.கே. நகரில் டெபாசிட்கூட வாங்க முடியாததற்கு தமிழிசை மீதே காரணம் சொல்லப்பட்டது (ஆனால் தமிழிசை காரணமல்ல, வாய்ச்சவடாலாக பேசி வரும் பாஜக தலைவர்களே உண்மையான காரணம் என்ற நிதர்சனம் இன்னும் பாஜகவுக்குப் புரியவில்லை).
முழுவீச்சு
தற்போது 5 மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாஜக பல வியூகங்களை அமைத்து வருகிறது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸா, பாஜகவா என்ற முழக்கம் எழ ஆரம்பித்துவிட்டது. அதற்காக தன்னை முழுவீச்சில் பாஜக தயார்படுத்தி வருகிறது.
டைம்-டேபிள்
பிரதமர் மோடியும் இதற்காக சுற்றுப்பயணத்துக்கு தயாராகிவிட்டார். அதற்கான டைம்-டேபிளும் ரெடியாகி விட்டது. இந்நிலையில் திரும்பவும் தமிழக பாஜக தலைமை மாற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. புதிய தலைமை பொறுப்புக்கு காமெடி நடிகர் எஸ்.வி. சேகர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சவால் விட்டார்
ஏற்கனவே ஒருமுறை, பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால், அதனை ஏற்கத்தயாராக இருப்பதாக எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடமே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய ஓட்டு வங்கியை தன்னால் அதிகமாக்கி காட்ட முடியும் என்றும் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் திரும்பவும் எஸ்.வி. சேகர் பெயர் அடிபடுகிறது.
பாஜக வீழ்ச்சி
பாஜக என்ற வார்த்தை அடிக்கடி தமிழகத்தில் உச்சரித்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமே தமிழிசை சவுந்தராஜன்தான். இது பாஜக தலைமைக்கு இப்போது வரை புரியவில்லை. மத, இனவாத செயல்பாடுகள், சிறுபான்மை மக்களை கையாளும் விதம், நீட் தேர்வு, இயற்கை வளங்கள் கொள்ளை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட எவ்வளவோ காரணங்களே தமிழகத்தில் பாஜக வீழ்ச்சியடைய பிரதான காரணம். இதற்கு தமிழிசைதான் கல்லடிப்பட்ட மரமாய் ஆகி போனார்.
கல்லடிபட்ட மரம்
சுப்பிரமணியசாமி, எச்.ராஜா போன்று பலமான ஆர்எஸ்எஸ் பின்னணி அவருக்கு இல்லைதான். இருந்தாலும், இன்றுவரை அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளானதால்தான் தமிழக மக்களிடையே வறுபட்டு வருகிறார். உண்மை என்னவென்றால், சுப்பிரமணியசாமி, எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் போன்றோர் பாஜக மாநில தலைவர்களாக பதவி வகித்திருந்தால் பாஜக தமிழகத்தில் என்றோ காணாமல் போயிருக்கும். அதே நிலைமைதான் எஸ்.வி.சேகர் இந்த பொறுப்புக்கு வந்தாலும் ஏற்படும்.
மோடி அபிமானி
எஸ் வி சேகரை பொறுத்தவரை, பிரதமர் மோடி மீது அதிக பாசமும், வெறித்தனமான பக்தியையும் வைத்திருப்பவர் பாஜகவிற்கு வந்ததே மோடிக்காகத்தான் என்று இவர் சொல்வார். அவ்வளவு எதற்கு? சென்ற முறை வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில்கூட ஈடுபட்டுவிட்டு வந்தார். மோடிக்கும் எஸ்.வி.சேகர் மீது எப்பவுமே ஒரு பிடிப்பு உள்ளது என்தை அவரை கைது செய்யாமல் இருப்பதிலேயே அன்றே தமிழக மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.
மறுக்க முடியாது
அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று ஒவ்வொரு கட்சிக்கும் சென்று வந்த எஸ்.வி. சேகரை மக்கள் தமிழக பாஜக தலைவராக அங்கீகரிப்பார்களா என தெரியாது. ஆனால் ஒரே கட்சியில், கடைசி வரை கொள்கை பிடிப்புடன், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்றுவரை பதில் அளித்து சமாளித்து தட்டு தடுமாறி கட்சியை மேலே தூக்கி வந்து கொண்டிருக்கிறார் தமிழிசை சவுந்தராஜன் என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை அவரது பதவி பறிக்கப்பட்டால், பாஜக தமிழகத்தில் இனி சொல்லிக் கொள்ளும்படி இருக்காது என்பது மட்டுமே உண்மை.
உண்மையிலேயே பாஜக மாநில தலைமை மாறுகிறதா? அல்லது தமிழிசை சவுந்தராஜனே தொடர்வாரா என்பது இனிதான் தெரியவரும்.