யாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை?
Recommended Video
சென்னை: விடிந்தும் விடியாத வேளையிலேயே சாதாரண மேட்டருக்காக கூட வரிந்து கட்டிக் கொண்டு பேட்டி தட்டுவது தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் வழக்கம்.
அதுவும் சாதாரணமாக பேசமாட்டார், ஸ்டாலினுக்கு செம்ம கடுப்பாகும் வண்ணம் 'வெற்றிகரமான தோல்வி! தோல்விகரமான வெற்றி! கசப்பான இனிப்பு! இனிப்பான கசப்பு!' என்று தாறுமாறாக பேட்டி தட்டுவார் அக்கா.
அப்பேர்ப்பட்ட தமிழிசையோ சர்வதேசமும் திரும்பிப் பார்த்திருக்கிற, பற்றி எரிகிற, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழக தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாமென்று தனது கட்சியினருக்கு உத்தரவு போட்டுவிட்டு, அவர்கள் அதற்கு நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டார்கள்! என்று அறிவித்தும் விட்டார்.
எதிர் கட்சிகள் குஷி
விளைவு, குஷியாகிவிட்டன தி.மு.க. போன்ற எதிர் கட்சிகள். எதிராளி இல்லாத நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இப்படியொரு முடிவெடுக்கப்பட்டதால் நாட்டின் மானம் போச்சு, மரியாதை போச்சு, மக்களின் சுதந்திரம் போச்சு, பாதுகாப்பு போச்சு, அது போச்சு இது போச்சு! என்று சேனல் பை சேனல் வெளுத்தெடுக்கின்றன எதிர்க்கட்சிகள்.
பா.ஜ.க. நிர்வாகிகள் தவிக்கின்றனர்
ஆனால் இதற்கு தகுந்த பதிலை சொல்ல முடியாமல் டி.வி.யை பார்த்தபடி தவிக்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். மக்கள் மத்தியில் மோடி, அமித்ஷா இருவரின் பெயரும் கெடும் நிலையில், இதை தடுக்க முடியவில்லையே எனும் தவிப்பு வேறு அவர்களுக்கு இருக்கிறதாம்.
கண்ணைக் கசக்கிய நிர்வாகிகள்
இதனால் டெல்லியில் நட்டா வரைக்கும் இந்த விவகாரத்தை பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகிகள் சிலர் கொண்டு போய்விட்டனராம். 'ஏற்கனவே தமிழக மக்கள் மத்தியில் நம் கட்சிக்கு வரவேற்பில்லை. இந்த நிலையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பற்றி மிக தப்பும் தவறுமாக நடத்தப்படும் பிரசாரத்துக்கு தக்க பதிலடி தரவில்லையென்றால், தேர்தலில் இது பெரும் விளைவுகளை உருவாக்கும்.' என்று கண்ணைக் கசக்கியுள்ளனர்.
ஏன் தடை
உடனே நட்டா டென்ஷனாகி, "சேனல்களில் கலந்து கொள்ள கூடாது என்று யாரைக்கேட்டு உத்தரவு போட்டார்?" என்று தமிழிசையை ஏகத்துக்கும் குறைபட்டுக்கு கொண்டு, காண்டாகியும் பேசினாராம். இதனால் தமிழக பாஜக தரப்பு பதட்டமாக உள்ளதாம். விரைவில் தடை நீங்குமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அடக்கடவுளே!
- ஜி.தாமிரா