பூ மழை... ஆளுயர மாலை - பாஜகவினர் வரவேற்பில் நெகிழ்ந்த குஷ்பு
பாஜகவில் இணைந்த பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை பார்த்து அப்படியே நெகிழ்ந்து போனார்.
சென்னை: பாஜகவில் இணையப்போகிறார் குஷ்பு என்று பல மாதங்களாக பரவிய வதந்தி இப்போது உண்மையாகி விட்டது. குஷ்பு பாஜகவில் இணைந்தே விட்டார். டெல்லி சென்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட குஷ்பு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் குஷ்புவிற்கு பூ மழை தூவி, ஆளுயர மாலை அணிவித்து பாஜக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பில் நெகிழ்ந்து போனார் குஷ்பு.
நடிகை குஷ்பு சினிமாவில் நடித்த போது தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினார். இந்திய வரலாற்றிலேயே குஷ்புவிற்கு கோவில் கட்டி சினிமா ரசிகர்கள் மானசீகமாக வழிபட்டனர். வடக்கே இருந்து வந்த குஷ்பு தென்னகத்து மருமகளானார்.
சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிரபலமாக இருந்த போதே கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் குஷ்பு. அப்போதே திமுகவில் ஓரளவிற்கு குஷ்புவிற்கு வரவேற்பு இருந்தது. குஷ்புவின் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூடியது.
சில ஆண்டுகளிலேயே குஷ்புவின் வளர்ச்சி அந்த கட்சியில் இருந்த மகளிர் அணியினருக்கு பிடிக்காமல் போனது. கட்சி தலைவர் பற்றிய கருத்தில் கலகம் ஏற்படவே கட்சியில் இருந்து வெளியேறினார். சில காலங்கள் சினிமா, சீரியல் என்று பிசியாகவே இருந்த குஷ்பு பின்னர் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தவரைக்கும் குஷ்புவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி அலுவலகமாக சத்திய மூர்த்தி பவனுக்கு சகஜமாக சென்று வந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளியாக பயணம் செய்தார். அங்கும் அவரது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. குஷ்புவிற்கு வெறும் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி மட்டுமே கிடைத்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டு திருநாவுக்கரசிடம் கொடுக்கப்பட்டது. குஷ்பு சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார். அவருக்குப் பின்னர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்னர் அவருக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கட்சியில் கிடைக்கவில்லை சுத்தமாக தனது அரசியல் ஈடுபாட்டை குறைத்துக் கொண்ட குஷ்பு, ட்விட்டரில் மட்டுமே பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் பக்கம் படிப்படியாக சாயத் தொடங்கினார் குஷ்பு. அவரது ட்விட்டர் பதிவுகளை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த சில மாதங்களாகவே குஷ்பு. புதிய கல்விக்கொள்கை பற்றி பகிரங்கமாக பாஜகவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டார் குஷ்பு.
குஷ்புவின் இந்த பதிவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இனிமேல் இந்த கட்சியில் இருந்தால் மரியாதை கிடைக்காது என்று அப்போதே குஷ்பு முடிவு செய்திருப்பார். சில மாதங்கள் பொறுமை காத்தும் அகில இந்திய தலைமையின் பாராமுகமும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
தம்பி.. எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க.. நிருபரிடம் ஆவேசமான குஷ்பு.. என்ன நடந்தது?
பாஜகவிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வரவே, மரியாதை இல்லாத கட்சியில் இருப்பதை விட மதிப்போடு அழைக்கும் கட்சியில் இணைந்து விடலாம் என்று நினைத்து இப்போது பாஜகவில் இணைந்து விட்டார் குஷ்பு. வழக்கம் போல தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று சொல்லி மோடியை பாராட்டி பேசினார்.
பாஜகவில் சேரும் முன்பு இரவு நேரத்தில் கணவருடன் அமைதியாக எந்த பதிலும் சொல்லாமல் டெல்லி சென்ற குஷ்பு, திரும்பி வரும்போது சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு காத்திருந்தது. விமான நிலையத்தில் குவிந்திருந்த பாஜகவினர், ஆளுயர மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் பாஜகவினர் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பில் நெகிழ்ந்து போனார் குஷ்பு.
இதே வேகத்தோடு கமலாலயம் போன குஷ்புவிற்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை தனக்கு மரியாதை இல்லை என்றும் பெண் புத்திசாலித்தனமாக இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு பிடிக்காது என்றும் கூறி தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. பாஜகவில் குஷ்புவின் செயல்பாடு எப்படி என்று போகப்போக தெரியும்.