கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியிருக்கீங்களா.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியோர் கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு செலவு திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக அரசு, விவசாயிகளை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது..
2020-2021 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் வேளாண் துறைக்கு ரூ.11894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்!
மின் இணைப்பு
தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70% மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல் வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
காய்கறி விதைகள்
வரும் 2020-2021 ம் ஆண்டில் ரூ.1844.97 கோடி மதிப்பில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசதி பெறும் என்று கூறிய நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 2020-2021 ம் ஆண்டில் 325 மெ.டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார். கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.
கரும்பு விவசாயிகளுக்கு
காவிரி வடிநிலப்பகுதிகளில் உள்ள 392 கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மாநில அரசின் பங்களிப்பாக ரூ.67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்/ குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ.12 கோடி மதிப்பில் 74,132 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டங்களின் தொழில் நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
இணைப்பு கால்வாய்
காவிரி முதல் வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் கூறினார்.
பயிர் கடன்
அதேநேரம் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது தொடர்பாக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், கூட்டுறவு அமைப்புகள் மூலம் 2020-21 ஆம் நிதியாண்டில் பயிர்க்கடனாக மொத்தம் ரூ.11000 கோடி வழங்கப்படும்.கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு செலவு திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.