தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. ஆட்சி காலத்தின் இறுதிகட்டம்.. அதிரடி அறிவிப்புகளுக்கு ஓபிஎஸ் பிளான்!
சென்னை: தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், நாளை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சட்டசபை தொடங்கியதும் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அடுத்தாண்டு மே மாதம், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே 2021ல் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரக்கூடிய வகையில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது, என்பதை முடிவு செய்ய உள்ளது.
மோடி-அமித் ஷா மட்டும் போதாது.. டெல்லி தோல்வி.. மேற்கு வங்க பாஜகவில் வெடித்த பூசல்
இந்த பட்ஜெட்டில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் மதிய உணவு வழங்க சத்துணவு திட்டம் தமிழகத்தில், முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜரால், கொண்டுவரப்பட்டது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதோடு, இடைநிற்றலை தடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், மதிய உணவுடன் முட்டையும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்து, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி காலை சிற்றுண்டி இந்த திட்டத்தை, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.