தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
சென்னை: 2019 - 20 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் நாளை காலை 10 மணிக்கு நிதித்துறையை கவனிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 8-வது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை கடந்த 2-ந் தேதி கூடியது. இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு 8-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால், மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற அறிவிப்புகள் போல், தமிழக பட்ஜெட்டிலும் பல முக்கிய திட்டங்கள், வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, அரசின் நிதிச்சுமை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ - ஜியோ போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.