தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது... பட்ஜெட், முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஏற்கனவே, உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட தொகைக்கு மேல்முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒப்புதல், சலுகைகள் வழங்க, அமைச்சரவை கூடி முடிவு எடுக்க வேண்டும். அதன்படி, ஏற்கெனவே 2 முறை தமிழக அமைச்சரவை கூடி, 31 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 50 நிறுவனங்கள் ரூ.50,500 கோடிக்கு முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், மேலும் 20 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.