காவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி
சென்னை: டெல்டா பகுதிகளில் ஏற்கனவே பெட்ரோலிய மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, டெல்டா மாற்றப்பட்டுள்ளதால், அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதுதொடர்பான சட்டத்தையும் நிறைவேற்றினார்.
இந்த நிலையில், சட்ட வல்லுநர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த ஒரு அரசாணை, இந்த சட்டத்திற்கு முட்டுக்கட்டையாக மாறுமோ என்ற ஐயம்தான் அது.
கடலூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் பெட்ரோல் மண்டலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்காக 57 ஆயிரத்து 345 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட இருப்பதால் பெட்ரோலிய மண்டலத்திற்கான அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வேளாண் மண்டலம் தொடர்பான சட்டத்தை அரசு அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.