மக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா?
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக கேன் வாட்டர்கள் சங்கத்தினர் (தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம்) அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சிவமுத்து என்பவர் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், 'நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு கடந்த 1987-ம் ஆண்டு சட்டம் இயற்றி உள்ளது.
இந்த சட்டத்தின்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் எந்த ஓர் அனுமதியும் இல்லாமல் பலர் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள்.
420 ஆலைகள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்..
நிலத்தடி நீர் உறிஞ்சல்
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அமர்வு ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும். இந்த ஆலைகள் உரிய அனுமதியை எதிர்காலத்தில் பெற்றாலும், உயர்நீதிமன்ற அனுமதியில்லாமல், இந்த ஆலைகள் இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது.
எத்தனை ஆலைகள்
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும், தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன? எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்கள்.
நீதிமன்றம் எச்சரிககை
இந்நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், உயர்நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்தனர். இதன்பின்பு, அரசிடம் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கானது மார்ச் 3ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
இந்நிலையில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் ( கேன் வாட்டர்) சங்கத் தலைவர் முரளி வெளியிட்ட அறிவிப்பில், இன்று மாலை முதல் குடிநீர் ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை உறிஞ்சி எடுக்கிறோம். இதன்காரணமாவே இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். மற்ற தேவைகளுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீரை, குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் சேர பார்க்கக் கூடாது' என்றார்.