பிளாஸ்மா தெரபி...ராஜீவ் காந்தி மருத்துவமனை...40 போலீசார் ரத்த தானம்!!
சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த 40 போலீசார் பிளாஸ்மா சிகிச்சைக்கான ரத்த தானம் செய்தனர். இவர்களை தமிழக சுகாதாரத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் சந்தித்து பாராட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த மருந்துகள் இல்லை. துணை மருத்துவ சிகிச்சைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி அளித்து இருந்தது. ஏற்கனவே இந்த சிகிச்சை எபோலா நோய்க்கு அளிக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் இந்த சிகிச்சை வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையிலும் இந்த சிகிச்சை வெற்றி பெற்றது.
எனவே, தமிழகத்திலும் இந்த சிகிச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்து இருந்தார். சென்னையில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் குணமடைந்தனர். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருந்துவமனையில் ரூ. 2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பதற்கு முதல்வர் அனுமதி அளித்து இருப்பதாகவும், விரைவில் திறக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து இருந்தார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்த தானமாக பெறப்படும். அந்த ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எனப்படும் மஞ்சள் நிறத்திலான திரவம் பிரித்து எடுக்கப்படும். இதுதான் உடலின் மற்ற உறுப்புகளுக்கு தேவைப்படும் சத்துக்கள்,ஹார்மோன், புரோட்டீன் ஆகியவற்றை எடுத்துச் செல்லும்.
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தப்படும். ரத்த தானம் செய்பவர்களின் வயது 18 முதல் 65க்குள் இருக்க வேண்டும். எந்த நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சர்க்கரை குறைவு, இருதய நோய், கிட்னி சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக் கொண்டு இருந்தார். அதன்படி இன்று ராஜீவ் காந்தி மருந்துவமனையில் இன்று 40 போலீசார் ரத்த தானம் செய்தனர். அவர்களை அமைச்சர் விஜய பாஸ்கர் சந்தித்து பாராட்டினார்.
என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை.. பிரேசிலிலிருந்து வந்த சிக்கனில் கொரோனா.. பரபரப்பு!
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில், ''கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மற்ற போலீசாரும் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்'' என்றார்.