தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை நேரில் சந்தித்து பேசினார்.
கொரோனாவை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் அண்மையில் மக்களிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வைக்க அவசர சட்டம் கொண்டு வந்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். இதன்படி தமிழகத்தில் விரைவில் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்ட நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
முன்னதாக செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகஅரசு பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இதேபோல் செப்டம்பர் 7ம் தேதிமுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்தது. நாளை முதல் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசல் தள சுற்றுலா தளங்களும் திறக்கப்படுகிறது.
ஒருபக்கம் பொருளாதாரத்தை மீட்க தளர்வுகளை முதல்வர் அறிவித்தாலும் மறுபக்கம் கொரோனா பரவலை தடுக்க சோதனைகளை தொடர்ந்துஅதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து, டிஸ்சார்ஜ் அதிகரிதது வருகிறது. உயிரிழப்பும் குறைந்து வருகிறது. பல மாவட்டங்கள் தொற்று பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகின்றன.
இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ராஜ்பவனில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளித்தார்.