மக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்
சென்னை: டெல்டா பகுதி மக்களின் ஒப்புதலின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்டா மக்களின் ஒப்புதல் இன்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் தமிழக விவசாயிகளின் நலன் காக்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்
சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் துறை அறிக்கை குறித்து தமிழக அரசின் கருத்துகளை கேட்டறியவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.