போனில் வந்த மிரட்டல்.. தலைமைச் செயலகத்தில் குவிந்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள்
சென்னை: சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து சில நாட்களாக வலுத்து வரும் நிலையில், அதனுடன் இந்த மிரட்டல் போலீசாரால் தொடர்புபடுத்தி பார்க்கபடுகிறது.
வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளையும், வாகன நிறுத்தும் இடங்களில் உள்ள ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்து வருகிறார்கள்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லங்களுக்கும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்து, போலீசார் அங்கும் சோதனைகள் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே எம்ஜிஆர் 32-வது நினைவு தினத்தையொட்டி 24ஆம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.