வாழப்பாடி அரசு பள்ளி மாணவர் டூ தமிழக தலைமைச் செயலாளர்.. வியக்க வைத்த சண்முகம் ஐஏஎஸ்
சென்னை: கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் இன்று பொறுப்பேற்றுள்ளார். வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற சண்முகம் இன்று தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ஆகி உள்ளார். அவரை பற்றி பார்ப்போம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது துக்கியாம் பாளையம். இந்த குக்கிராமத்தில் பிறந்தவர் தான் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சண்முகம்.
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த சண்முகம். கோவை வேளாண் கல்லூரியில் படித்து வேளாண் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் தான் இவரது குடுபம்பத்தில் முதல் படித்த பட்டதாரி ஆவார்.
தஞ்சையில் சப் கலெக்டர்
படித்து முடித்த உடன் சண்முகம் ஐஏஎஸ் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றார். 1985ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக சண்முகம் பணியில் சேர்ந்தார்.பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் ஆரம்ப காலத்தில் சண்முகம் பணியாற்றினார். இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப் கலெக்டராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் வணிவரித்துறை துணை ஆணையர், பட்டுவளர்ச்சி இயக்குனர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
சிமெண்ட் சாலை திட்டம்
1995 முதல் 1998 வரை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியானார். அதன்பின்னர் 2001ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். 2001ம்ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் கிராமங்களில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல் உள்பட நிறைய திட்டங்களை செயல்படுத்தினார். அதன்பிறகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கத்தின் கீழ் நிதித்துறை செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின்னர் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனராக 2005 மீண்டும் தமிழகத்தில் பொறுப்பேற்றார். அதன்பின்னர் 2007ம் ஆண்டு உணவுத் துறை செயலாளராகவும் பணியாற்றிய அவர், 2010 மே மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியால் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா அனுமதி
அதன்பிறகு அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக தொடர ஜெயலலிதா அனுமதித்தார். அப்போது இலவச அரிசி திட்டம், கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தினார். இதேபோல் தமிழகத்தில் ரேஷன் கடைகளை கணிணி மயமாக்கியது, நீர்நிலைகளைக் காக்கும் குடிமராமத்து திட்டம் போன்றவற்றை செய்து சிறப்பான பாராட்டை பெற்றார். இந்நிலையில் மீண்டும் 2016ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்த போதும், எடப்பாடி தலைமையிலான அரசிலும் நிதித்துறை செயலாளராக பணியாற்றினார். நிதி நிர்வாகத்தை சிறப்பாக செய்ததால் எடப்பாடியின் நம்பிக்கையை பெற்ற சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராக உயர்ந்துள்ளார்.
பூரிக்கும் மாணவர்கள்
படித்தது விவசாயம் என்பதாலும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் சண்முகத்துக்கு விவசாயம், தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் அதிகமாம். சண்முகம் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பார். வாழப்பாடி அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ் அதிகாரியாகி இன்று தலைமைச் செயலாளராகி உள்ளதை எண்ணி அந்த பள்ளி மாணவர்களும் , ஆசிரியர்களும்,அதில் படித்தவர்களும் பூரித்துப்போய் உள்ளார்கள். அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.