சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு கூடாது.. மருத்துவ குழு அதிரடி பரிந்துரை
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்க கூடாது என்று, மருத்துவர் குழு, முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், 27ம் தேதி, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.
அப்போது, கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என்று, மருத்துவ நிபுணர் குழு அப்போது பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் ஜூன் 1 முதல் பஸ், ரயில் ஓடுமா.. மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன? பரபர தகவல்
நேற்று ஆலோசனை
இந்த நிலையில்தான், நேற்று தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். நேற்றைய கூட்டத்தில், மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தை துவங்க நிறைய கலெக்டர்கள் கோரிக்கைவிடுத்தனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, அல்லது, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களிடையே மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்பது கோரிக்கை. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று மறுபடியும், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர்.
முழுமையாக சொல்ல முடியாது
இதற்கு பிறகு, நிருபர்களிடம், பேசிய மருத்து நிபுணர் குழுவின் மருத்துவர்கள் கூறியதாவது: நிபுணர் குழுவின் ஐந்தாவது ஆலோசனை கூட்டம் முதல்வருடன் இன்று நடைபெற்றது. இதில் பல விஷயங்கள் ஆலோசனை செய்தோம். முக்கியமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இது ஒரு புதிய வகை வைரஸ். எந்த மாதிரி இது செயல்படும் என்பது பற்றி முழுமையாக சொல்லிவிட முடியாது.
நகரங்களில் அதிகம்
இந்தியா உட்பட பல நாடுகளில் இது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதையும் ஆலோசித்து கொண்டு இருக்கிறோம். இந்த வைரஸ் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. மற்ற பகுதிகளை ஒப்பிட்டால் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 70% வைரஸ் பிரச்சினை 30 நகரங்களில்தான் இருக்கிறது.
சென்னை நிலவரம்
தமிழகத்தில், சென்னை மெட்ரோ பாலிட்டன் சிட்டி. எனவே இங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் என்பது குறைவாக இருப்பது நல்ல விஷயம். எந்த அளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் அதிகரிக்கப்படுகிறது. எனவே நோயாளிகளை கையாள முடிகிறது. வாழ்க்கையை மட்டும் பார்த்தால் போதாது, வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. எனவே இதில் சவால் இருக்கத்தான் செய்யும்.
4 மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் தளர்வு அதிகம் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தினோம். மாவட்டங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி கட்டுப்பாடு சரியாக வராது. எனவே, இந்த 4 மாவட்டங்களுக்கும் வேறு மாதிரியும், பிற மாவட்டங்களுக்கு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற வகையிலும், தளர்வு கொடுக்கலாம், என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஏற்கனவே ஊரடங்களில் நிறைய சலுகைகள் உள்ளன. மெட்ரோ ரயில், பஸ், கல்யாண மண்டபம், தியேட்டர் போன்றவற்றை இயக்க வேண்டியதும், வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டியதும்தான் பாக்கி. அது இந்த 4 மாவட்டங்களுக்கும் வேண்டாம் என்று பரிந்துரைத்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.