துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு...முதல்வர் பூங்கொத்து கொடுத்து நன்றி!!
சென்னை: சென்னையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பூங்கொத்து கொடுத்தார்.
நீண்ட நெடிய போராட்டத்துக்கும், ஆலோசனைக்கும் பின்னர் இன்று காலை வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்தார். மேலும், வழிகாட்டு குழுவில் இருக்கும் 11 பேரின் பெயர்களையும் அறிவித்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று அவரது இல்லத்திற்கு முதல்வர் சென்று இருந்தார். அப்போது அவரிடம், அதிமுக எம்பி ரவீந்திரநாத் ஆசி பெற்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்துக் கொண்டனர்.
இதையடுத்து, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் அறிவித்தார். இந்தக் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , எஸ்பி வேலுமணி , ஜெயக்குமார், சி.வி சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம் பி கோபால கிருஷ்ணன் , முன்னாள் அமைச்சர் மோகன் , சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் சார்பில் 5 பேரும், ஈபிஎஸ் சார்பில் 6 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
வழிகாட்டுதல் குழுவில் தனது கை ஓங்கி இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதியதால் நேற்று இரவு நீண்ட நேரம் இழுபறி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், இந்தக் குழுவில் பெண்களுக்கு என்று எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. ஒரு பெண் கட்டிக் காத்த, பெண் முதல்வராக இருந்த அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் பெண்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக பன்னீர் செல்வம் இருப்பார்.