19 மொழியில் 10,000 பாடல்.. வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..உருக்கமாக இரங்கல்
தமிழ்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானர். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி புகழ்கொடி நாட்டி திரையுலகில் முடிசூடா இசை வாணியாக வாணி ஜெயராம் திகழ்ந்தார் என உருக்கமாக புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். வயது 78. இந்தியாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார். தனது இனிமையாக குரலில் 19 மொழி பேசும் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்கு சொந்தக்காரராக வாணி ஜெயராம் இருந்தார்.
வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் வாணி ஜெயராமை பெருமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விரைவில் அவர் அந்த விருதை பெற இருந்தார்.
சிசிடிவி காட்சிகள் சொல்வது என்ன?.. வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை
வாணி ஜெயராம் மறைவு
இந்நிலையில் தான் வாணி ஜெயராம் நேற்று காலமானார். நேற்று காலையில் வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் காயமிருந்தது. இதனால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
முதல்வர் நேரில் அஞ்சலி
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவர் மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதையடுத்து ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முடிசூடா இசை வாணியாக
திரையுலகில் முடிசூடா இசை வாணியாக விளங்கி கொண்டிருந்த வாணி ஜெயராம் நேற்றைய தினம் மறைந்தார். அவரது மறைவு செய்தியை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி புகழ்கொடி நாட்டியவர் தான் வாணி ஜெயராம்.
10 ஆயிரம் பாடல்களுக்கு மேலாக
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சரித்திர சாதனையை படைத்துள்ளார். அண்மையில் தான் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் பத்மபூஷண் பட்டத்தை வாங்கவதற்குள் எதிர்பாராத விதமாக மறைந்துவிட்டார். அவரது பிரிவால் வாழும் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
பெரும் துயரம் என இரங்கல்
முன்னதாக நேற்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் ‛‛ 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் வாணி ஜெயராம். அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது தான் வாழ்த்து தெரிவித்து இருந்தேன். விருது பெறும் முன்னரே இவ்வுலகை அவர் விட்டுப் பிரிந்தது பெரும் துயரம். வாணி ஜெயராமின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
மேலும் பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழ் மொழியில் அஞ்சலி செலுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி'' என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியும், வாணி ஜெயராம் உடலுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, ‛‛பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்'' என தெரிவித்து இருந்தார்.