தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? முதல்வருடன் ஆலோசித்து முடிவு.. அமைச்சர் அன்பழகன் அதிரடி பேட்டி
சென்னை: கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யும் கோரிக்கையை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகிறார்கள்.
இப்போது இருக்கக்கூடிய, கொரோனா பரவல் காலகட்டத்தில், பொறியியல் மாணவர்கள், கலை அறிவியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் பேராசிரியர்கள் என சுமார் 50 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழல் ஏற்படும். இது ஆபத்தாக முடியும் என்று கல்வித்துறை கருதுகிறது.
நாடு முழுக்க வேகமாக அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.. மறைத்த நம்பர்களும் வெளியே வருகிறது
சென்னையில் பேட்டி
இவையெல்லாம் குறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசியபோது இந்த தகவலை கூறினார். அவர் என்ன கூறினார் என்பதை பாருங்கள்.
தனியார் கல்லூரிகளில் நோயாளிகள்
கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், நோய் அறிகுறி உள்ளவர்கலை தனிமைப்ப்டுத்தவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு, ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை.
கல்லூரி தேர்வு ரத்து பற்றி ஆலோசனை
கல்லூரிகள் காலியாக இருந்தால்தான், தேர்வுகளை நடத்த முடியும். எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு நிவர்த்தி ஆன பிறகுதான் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். தேர்வு ரத்தாகுமா என கேட்கிறீர்கள். அதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொரு மாணவரின் கல்வித் தரத்தை பிரித்து பார்ப்பதற்கான சாத்தியக்கூறு தேர்வைத் தவிர வேறு, கிடையாது. கல்லூரி மதிப்பெண் என்பது எதிர்காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, தேர்வு ரத்து குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
நடைமுறை சிக்கல்கள்
பல்வேறு நிறுவனங்களும், கல்லூரி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியளிப்பது வழக்கம். எனவே எஸ்எஸ்எல்சி தேர்வை போல கல்லூரி தேர்வை ரத்து செய்வது நடைமுறையில் சிக்கல் வாய்ந்த முடிவு. எனவே, இப்போதைக்கு தேர்வை நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ள உயர் கல்வித்துறை, தேர்வு ரத்து குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஒடிசாவில் செமஸ்டர் தேர்வு ரத்து
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் செமஸ்டர் இறுதி தேர்வுகளை நேற்று ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. மாற்று மதிப்பீடு மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு கூறியது.
அதாவது, பரிந்துரைக்கப்பட்ட வெயிட்டேஜ் மற்றும் அந்த பாடத்தில் முந்தைய அனைத்து செமஸ்டர்கள் / ஆண்டுகளில் பெறப்பட்ட சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் உள் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாற்று மதிப்பீடு மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் எந்த மாணவருக்காவது திருப்தி இல்லை என்றால், அதிக மதிப்பெண்களை அவர்கள் கோருகிறார்கள் என்றால், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் நவம்பர் மாதத்திற்குள் அவர்களுக்கு தேர்வை நடத்தி டிசம்பரில் திருத்தப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் என்று ஒடிசா அரசு கூறியுள்ளது.