நோ அப்பாயிண்ட்மெண்ட்... அமைதிகாக்கும் டெல்லி அக்பர் சாலை.. காத்திருக்கும் தமிழக காங்.பிரமுகர்கள்..!
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு தமிழகத்தை சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் காத்திருக்கின்றனர்.
டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த பதிலும் வராததால் பலரும் மனச்சோர்வு அடைந்துவிட்டனர்.
தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!
கட்சிப்பதவி முதல் கூட்டணிக் கட்சியின் அணுகுமுறை வரை புகார் கூறுவதற்காக தான் தலைமையிடம் நேரம் கேட்டிருக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை தலைவர்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு தலைவர்கள் நிறைந்த கட்சியாக தமிழக காங்கிரஸ் கமிட்டி திகழ்கிறது. திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாணிக்கம் தாகூர், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, என ஒவ்வொரு தலைவருக்கும் கணிசமான ஆதரவாளர்கள் வட்டம் உள்ளது. இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸ் இப்போது தொடங்கியுள்ளது.
யார் யார்?
அதில் செல்வப்பெருந்தகை, விஜயதரணி, ஜோதிமணி எம்.பி., கார்த்தி சிதம்பரம், செல்லக்குமார் என லிஸ்ட் நீள்கிறது. தமிழக பாஜகவில் பெண் ஒருவர் மாநில தலைவராக இருந்ததை போல், தமிழக காங்கிரஸில் பெண் ஒருவரை மாநில தலைவராக நியமிப்பது குறித்தும் அக்கட்சியின் தலைமை ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் விஜயதரணி எம்.எல்.ஏ.வும் ஜோதிமணி எம்.பியும் தலைவர் பதவிக்கான ரேஸில் பெண்கள் கோட்டாவில் இடம்பிடித்துள்ளார்கள்.
பதவிப்போட்டி
இதேபோல் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., செல்லக்குமார் எம்.பி. ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் சோனியாவையோ அல்லது ராகுலையோ நேருக்கு நேர் சந்தித்து பேசி விடவேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முக்கிய பிரமுகர்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர். சோனியா தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு பார்வையாளர்களை சந்திப்பதை பல மாதங்களாக தவிர்த்து வருகிறார்.
நேரம் ஒதுக்கீடு
இதனால் ராகுல்காந்தியை தான் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். சோனியா காந்தி நேரம் ஒதுக்காவிட்டாலும் பரவாயில்லை, ராகுலையாவது சந்தித்துவிட வேண்டும் என தமிழக கதர்ச்சட்டை பிரமுகர்கள் பலர் டெல்லிக்கு செல்வதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் ராகுல்காந்தியின் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கவில்லை. தமிழக கமிட்டி தலைவராக ஒரு வேளை செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டால் அவர் வகித்து வரும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி விஜயதரணி வசம் செல்ல வாய்ப்புள்ளது.