கின்னஸ் சாதனை படைத்த தமிழக காங்கிரஸ்... உலகிலேயே எந்தக் கட்சியும் செய்யாத ஒரு காரியம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத வரலாற்று சாதனையாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.
இதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சியின் அகில இந்திய தலைமை வாழ்த்து தெரிவித்துள்ளது.
இருப்பை காட்டிக் கொள்ளவே இன்னோவா கார் தருவோம்.. மோர் தருவோம்னு பாஜக சொல்றாங்க.. கே எஸ் அழகிரி
கின்னஸ் சாதனை
உலகின் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சாதனையை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிகழ்த்தி காட்டியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடி உயர கொடி மரத்தை நிறுவி அதில் கொடியை பறக்கவிட்டுள்ளது. 150 அடி உயர கொடி மரம் என்பது உலகின் எந்த அரசியல் கட்சியும் நிறுவாத ஒன்றாகும். இதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி இடம்பெற்றுள்ளது.
நீளம்; அகலம்
150 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடியின் அளவு அகலம் 35 அடி, நீளம் 20 அடி என வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் முழுக்க முழுக்க சென்சார் உதவியுடன் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொடியேற்றுவது, இறக்குவது, பறக்கவிடுவது என எல்லாமே ரிமோட் கன்ட்ரோல் மூலமே இயக்க முடியும்.
114 அடி உயரம்
திமுக தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தின் உயரமானது 114 அடியாகும். இது தான் இந்தியாவிலேயே அதிக உயரம் கொண்ட கொடிக்கம்பம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளது தமிழக காங்கிரஸ். இதனிடையே இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 367 அடி உயர கொடிமரம் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டெல்லி நிறுவனம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிறுவப்பட்டுள்ள இந்த 150 அடி உயர கொடிக்கம்பத்தின் மொத்தச் செலவு ரூ.20 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியை சேர்ந்த நிறுவனம் இதை வடிவமைத்து பொருத்தியதாக தெரிகிறது. கொடிமரத்தின் உயரமும், எடையும் அதிகம் என்பதால் அடித்தளத்தில் காங்கிரீட் கலவை கொண்டு வலிமையாக கட்டமைக்கப்பட்டு பெயர்பலகை பொருத்தப்பட்டுள்ளது.