ராகுல் ஒருபக்கம் நடக்க.. இன்று “நடைபயணத்தை” தொடங்கும் தமிழக காங்கிரஸ்! பங்கேற்கும் மூத்த தலைவர்கள்
சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி இன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 3 நாட்கள் நடைபயணம் தொடங்கப்பட உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சி நடைபெறும் நிலையில் அதனை பாதுகாக்க நடைபயணம் செல்லுமாறு மாநில நிர்வாகங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தியுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பா.ஜ.க தொடுத்து வருகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பா.ஜ.க தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
“காந்தி கொலை” நினைவிருக்கா? ஆர்எஸ்எஸ் பேரணி தேவையில்ல.. “மதவெறுப்பு” - விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்
உரிமைகள் பறிப்பு
இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழி வாங்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு இந்திய அரசமைப்புச் சட்டம்தான். இதன் மூலமே பொது மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் காப்பாற்றப்படும்.
75 கிலோ மீட்டர்
இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., துறை, எஸ்.டி. துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், சிறுபான்மைத் துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்பு சாராத் தொழிலாளர் பிரிவு என எட்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இன்று தொடக்கம்
இப்பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நடைபயணம் இன்று காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடக்கி வைக்க இருக்கிறேன். இந்தத் எழுச்சிமிக்க பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று வெற்றிபெற அனைவரது ஆதரவையும் கோருகிறேன்.
மூத்த தலைவர்கள்
இந்நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே. ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.