மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
சென்னை: தமிழகத்தில் தற்போது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாக உள்ள 11345 பேரில், சுமார் 10 ஆயிரம் பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 208 பேரில் 185 பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது புள்ளி விவர ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதில் 95 சதவீதம் தொற்றுகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் உள்ளது. சென்னையில் கொரோனா பரவலை மிகமிக கடுமையாக உள்ளது.
காது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு
சென்னையில் உச்சம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 1286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் மிகப்பெரிய உச்சமாக 1012 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை 14,316 பேர் குணம் அடைந்துள்ளனர். 11345 பேர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனையில் உள்ளனர். 208 பேர் உயிரிழந்துள்னர்.
கொரோனா நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாக மருத்துவமனையில் தற்போது உள்ள 11345 பேரில் 9692 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகளாக 8405 பேர் மருத்துவமனையில் உள்ளார்கள். உயிரிழந்த 208 பேரில் 185 பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் இறந்துள்ளனர். 85.4 சதவீத நோயாளிகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
எங்கு அதிக பாதிப்பு
இதுதவிர தூத்துக்குடியில் 135 பேரும், சேலத்தில் 153 பேரும், கள்ளக்குறிச்சியில் 109 பேரும், திருநெல்வேலியில் 98 பேரும், மதுரையில் 96 பேரும் கொரோனா தொற்றுடன் நோயாளிகளாக உள்ளனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிந்துள்ளது. திருப்பூர்(0), நீலகிரி (0),ஈரோடு (1), பெரம்பலூர் (3), சிவகங்கை (4), கிருஷ்ணகிரி (8), கரூர் (4), தருமபுரி (4), புதுக்கோட்டை (8) ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு முழுமையாக சரிந்துள்ளது. இதுதவிர அரியலூர் (11), கோவை (15), நாகப்பட்டினம் (13), தேனி (15), திருப்பத்தூர் (11), திருவாரூர் (15), திருச்சி (16), வேலூர் (13) ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் மிக குறைவாகவே உள்ளனர்.
நேற்று 11 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை (20), தென்காசி (21), தஞ்சாவூர் (23), ராமநாதபுரம் (35), கன்னியாகுமரி (32), திண்டுக்கல் (22), கடலூர் (35), விழுப்புரம் (24), விருதுநகர் (38) ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிதமான அளவில் உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 14316 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9034 பேர் குணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 671 பேரும், திருவள்ளூரில் 630 பேரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் உயிரிழப்பது வயதானவர்கள் தான். உடல் ஆரோக்கியம் குன்றியவர்களே பெரிதும் இறக்கிறார்கள். நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். இதில் அனைவருமே 48 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒருவரை தவிர அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.