தமிழகத்தில் கொரோனா காலி படுக்கைகளை அறிய புதிய இணைய தளம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org என்னும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 26 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளது. தினசரியும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைகள், கொரோனா படுக்கைகள் நிரம்பி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை அறிய தமிழக அரசு https://tncovidbeds.tnega.org என்ற இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 11,73,439 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,35,355ஆக அதிகரித்துள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனிடையே தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறந்திருக்கும்.. முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போட தடையில்லை
கொரோனா பாதிப்பால் நலிவுற்றவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காலி படுக்கைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும் தமிழக அரசு புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org என்னும் வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் விபரங்களை இந்த இணைய தளத்திற்கு சென்று பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.