அதிமுகவில் இரட்டை தலைமையால்.. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை.. திருநாவுக்கரசர்
சென்னை: அதிமுகவுக்கு இரட்டை அதிகார மையங்கள் இருப்பதால்தான் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி லோக்சபா தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு வலிமை வாய்ந்த ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ-வும், மதுரை முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா கூறியது அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து அதிமுகவுக்குள் இருக்கும் உட்கட்சி மோதலை புடம் போட்டு காண்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கிடைக்காதது இரட்டைத் தலைமையால்தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு கிடைக்கவில்லை
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு கூறுகையில், "அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை இல்லாததால்தான், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
ஒருவர் தலைமையேற்றால்
மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒருவர் தலைமையேற்றால்தான் அக்கட்சி முறையாக, சிறப்பாகச் செயல்பட முடியும். இரண்டு பேரோ, மூன்று பேரோ, அல்லது குழுக்களோ, அவர்கள் ஒன்றாக கலந்து பேசலாம். ஆலோசிக்கலாம் ஆனால் முடிவு என்பது வேறு. அனைவருடனும் கலந்துரையாடலாம், கருத்துக் கேட்கலாம் ஆனால் முடிவை ஒருவர் மட்டுமே எடுக்க வேண்டும்.
அதிமுக இரட்டை தலைமை
அதிமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தார்கள். அந்த கூட்டணி சார்பில் ஒருவர் வெற்றியும் பெற்றுள்ளார். மோடி தமிழகத்துக்கு ஓர் அமைச்சர் பதவியைத் தரவும் தயாராக இருந்தார். ஆனால் இரட்டை தலைமையோடு அதிமுக இயங்கி வருவதால் இரண்டு பிரிவினரும் பிரிவுக்கு ஒன்று என இரண்டு அமைச்சர்களை கேட்டு இருக்கலாம்.
குலுக்கு சீட்டு போட முடியுமா
ஆனால் மோடி ஒரு அமைச்சர் பதவிதான் தருவதாகக் கூறியதால் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பு இரட்டைத் தலைமையால் இல்லாமல் போய்விட்டது. அதேபோல 3 மாநிலங்களவை எம்.பி. பதவியை 30 பேர் கேட்கிறார்கள். இரட்டைத் தலைமையில் சீட்டா குலுக்கிப் போடமுடியும்?" என்று கேள்வி எழுப்பினார் திருநாவுக்கரசர். அதிமுகவின் இந்த இரட்டைத் தலைமை பிரச்சனை இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது