சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்
சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 471 அபாயகரமான பிர்காவில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.
ஆனால் அதேநேரம் குடிநீர் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியது. எனினும் தமிழக அரசு குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடக்க அனுமதி தரவில்லை.
அதிரடி தடை
இதையடுத்து குடிநீரை நிலத்தடி நீரை சட்டவிரோத உறிஞ்சும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை செய்யாவிட்டால் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
6மணி முதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை 6மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் இறங்கியுள்ளனர். சென்னையில் சுமார் 500 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களும், மாநிலம் முழுவதும் 1627 குடிநீர் நிறுவனங்களும் குடிநீர் கேன்களை உற்பத்தி செய்து வருகின்றன.
சென்னையில் மட்டும்
சென்னையில் தினமும் 5 லட்சம் குடிநீர் கேன்கள் சராசரியாக தினமும் தேவைப்படுகிறது. மாநிலம் முழுவதும் என்றால் 20 லட்சம் குடிநீர் கேன்கள் தேவைப்படுகிறது. இப்போது திடீரென குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதால் மக்கள் குடிநீர் கேன் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
குடிநீர் கேன் தட்டுப்பாடு
இரண்டாவதாக வேலை நிறுத்தம் தொடர்வதால் மற்ற நகரங்களைவிட சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும் நிலை உள்ளது. ஏனெனில் சென்னையில மக்கள் குடிநீருக்காக குடிநீர் கேனைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.திடீரென குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தற்போது புழக்கத்தில் உள்ள குடிநீர் கேன்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் உள்ளது. மக்கள்இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலையும் வரலாம்.
ஏன் போராட்டம்
இந்நிலையில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் சங்கத் தலைவர் முரளி, குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் தடையில்லா சான்றிதழ் பெற்று தண்ணீர் எடுத்து வந்தோம். ஆனால் இப்போது குடிநீர் கேன் நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க குறிப்பிட்ட பகுதிகளில் தடை விதித்துள்ளது. எனவே தான் வேலைநிறுத்தத்தில் இறங்கி உள்ளோம். இந்த விவகாரத்தில் அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.