மின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்
சென்னை: ஸ்லாப் முறை கணக்கீட்டால் தமிழகத்தில் மின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு வரை அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வளவு பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று வேதனை தெரிவித்துள்ள மக்கள், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீடுகளில் மின் நுகர்வு கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.
அதற்கு முந்தைய மாதங்களில் இருந்த கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று மின் வாரியம் அறிவித்தது. இதன்படி பிப்ரவரி மாதம் பலருக்கும் மின் கட்டணம் அதிகபட்சமாக 500 வரையே இருந்தது. அதைகட்டிவிட்டனர்.
விஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்
எகிறி மின் பயன்பாடு
ஆனால் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில் மின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. பலரும் வீட்டிலேயே இருந்ததால் ஏசி, டிவி, மின்விசிறி, தொலைக்காட்சி, கணிணி என அதிகமாக பயன்படுத்தி இருந்தனர். இந்த மூன்று மாத காலமும் மின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. கோடைக்காலம் மற்றும் வீட்டுக்குள்ளேயே மக்கள் இருந்தது போன்ற காரணத்தால் இயல்பைவிட மிக அதிக அளவு மின் நுகர்வு இருந்தது. இந்நிலையில் மக்கள் பழைய கட்டணத்தை செலுத்தி இருந்த நிலையில் ஜூன் மாதம் மின் கணக்கெடுப்பு நடந்தது.
மின்கட்டணம் அதிகரிப்பு
இந்த கணக்கெடுப்பின் போது நான்கு மாத (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் , மே) மின் நுகர்வு இருமாத மின் நுகர்வோ பிரிக்கப்பட்டு அதற்கான மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. அதில் முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்ட பின் புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டது. இதன்படி தான் மின் கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட யூனிட்டுக்கு மேல் போனால் இரண்டு மடங்காக மின் கட்டணம் மாறும். அப்படி ஒரு இக்கட்டான சூழலை மக்கள் இப்போது சந்தித்துள்ளார்கள். 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தியவர்கள் இலவசம் என்று இருந்த நிலையில் இப்போது கூடுதலாக வந்த யூனிட்டால் மின் கட்டணம் அவர்களுக்கு 200 முதல் 500 வரை வந்துள்ளது.
கடுமையாக உயர்வு
இதேபோல் 500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தியவர்கள் இப்போது 2000 வரை செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. மேலும் 500 யூனிட்டிற்கு மேல் மின் கட்டணம் வருபவர்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2 ஆயிரம் வழக்கமாக மின் கட்டணம் செலுத்தியவர்கள் இப்போது 10 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 100களில் கட்டியவர்கள் 1000த்தையும் 1000த்தை கட்டியவர்கள் 10000த்தையும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த முறை 1010 வந்த மின் கட்டணம் இந்த முறை 2374 என்கிறார் மதனகோபால். சென்ற முறை 800 இருந்த மின் கட்டணம் இப்போது 5000 ஆகி இருப்பதாக யாசர் என்பவர் கூறினார். இதேபோல் விஜய் என்பவருக்கு 500 வந்த நிலையில்இப்போது 2044 வந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். 150 மின் கட்டணம் வந்த கதிர் என்பவருக்கு இப்போது 670 ரூபாய் வந்துள்ளதாக கூறினார்.
கையில் காசு இல்லை
கொரோனா வராமல் தடுக்க வீட்டில் இருந்தால் நல்லது என்று அரசு மூன்று மாதத்திற்கு மேல் மக்களை வீட்டில் இருக்க வைத்தது. இதன் காரணமாக மின் பயன்பாடு இந்த மூன்று மாத காலத்தில் மிக மிக அதிகரித்தது. 3 மாதம் கழித்து இப்போது மின் கணக்கீடு செய்யப்பட்டு ஸ்லாப் முறை செய்யப்பட்டுள்ளதால் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் பிரசன்னா மட்டுமல்ல, பலரும் தங்கள் ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் கையில் காசு இல்லாத சூழலில் அரசு நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.