50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு.. எப்படி பெறுவது.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்றும், தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் வேளாண் பணிக்கான மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, 4.74 லட்சம் விவசாயிகள் காத்துக்கிடக்கிறார்கள். இதனால் விவசாயம் செய்யாமல் பலர் நிலத்தை தரிசாக போடும் நிலை உள்ளது.
ஏனெனில் வேளாண் பணிக்கென விண்ணப்பித்த உடனே மின் இணைப்பை அதிகாரிகள் வழங்குவதில்லை. விவசாயிகள் இலவச மின்சாரம் பெற சுயநிதி மின் இணைப்பு எனப்படும் 'தட்கல்' விரைவு திட்டம், சாதாரண மின் திட்டம் என இரு முறைகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
ரூ.2000 நோட்டு.. பிரதமருக்கு சம்மதம் இல்லை.. ஒருமித்த கருத்துக்கு ஓகே சொன்னார்..நிருபேந்திர மிஸ்ரா!
இலவச மின்சாரம்
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி "இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்துதல் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
இலவச மின்இணைப்பு
மேலும், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
விவசாயி மின் இணைப்பு
இந்நிலையில், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்க உள்ள திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி இத்திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சாதாரண வரிசை முன்னுரிமையில் 2003 முதல் 2004 வரை பதிவு செய்தோரில் 1000 விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெறலாம் என்று கூறியுள்ளது.
எளிதாக்கப்பட்ட விதிமுறை
இதனிடையே தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறும் விதிமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எளிதாக மின்சார இணைப்பு இனி பெற முடியும். ஒரே கிணற்றில் உரிமையுடைய அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்கும். பிறரிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கலை நீக்கி உள்ளது. பிற இடத்துக்கு மின் இணைப்பை மாற்றுதல், ஒரே நபருக்கு இரு கிணறு இருந்தால் இரு இடங்களிலும் மின் இணைப்பு பெறுதல், விண்ணப்பித்தால் மூன்று தினங்களில் மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2003 வரை விண்ணப்பித்தவர்கள்
இதற்கிடையே, விவசாயத் தேவைக்கென சாதாரண மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களில், முதற்கட்டமாக கடந்த 31.3.2000 முதல் 31.3. 2003 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வரும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.