தமிழகத்தின் சிற்பி...நவீனத்தின் தந்தை...சொல் வல்லமை...எழுத்து திறன்...அவர்தான் கருணாநிதி!!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். முத்துவேல் கருணாநிதி என்று அழைக்கப்படும் இவர் 1924 ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, கவிஞராக, அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தவர். எழுத்துலகிலும், அரசியலிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை விட்டுச் சென்றவர்.
இன்றும் தமிழுக்கும், எழுத்துக்கும், சொல் வல்லமைக்கும் அவரைத்தான் தமிழகமே நினைவு கூறுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் தமிழகத்தை முன்னணி மாநிலமாக எடுத்துச் செல்ல முக்கிய காரணாமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். மாணவர்களுக்கு என்று இவர் கொண்டு வந்த அரிய திட்டங்களால் இன்று தமிழகமே இவரை போற்றுகிறது.
கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு தினம் : ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி - நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
5 முறை முதல்வர்
5 முறை முதல்வர், 50 ஆண்டுகால தமிழக அரசியல், கடுமையான எதிர்ப்பு, ஆதரவு என்று இரு துருவங்களில் பயணித்தவர். தமிழகத்தை முதல்வர் என்ற இருக்கையில் இருந்து 6,863 நாட்கள் ஆட்சி செய்தவர். தமிழகம் மட்டும் இல்லை, மத்தியில் இவர் காட்டியதால் அமைந்த ஆட்சிகளும் உண்டு, காணாமல் போன ஆட்சிகளும் உண்டு. தென்னகத் தலைவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்.
சிந்தனை சிற்பி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருக்குவளையில் பிறந்து, தமிழகத்தின் அரியணையில் அமர்ந்த அவர் என்ன அப்படி படித்தார் என்று கேட்கலாம். ஆனால், படிப்புக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது சிந்தனைகள், எழுத்து வல்லமை, அவரை உச்சாணிக்கு கொண்டு சென்றன. அவரது நாவில் தமிழ் விளையாடியது. அவரை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட்டு செல்ல முடியாது. அவரது சாதனைகளைப் பார்ப்போம்:
மின்சாரம்
போக்குவரத்து துறை உருவாக்கி, அதை தேசியமையமாக்கினார்.. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், வழித்தடம் அமைத்தார்.. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அமைத்தார். இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தார். இது கிராமங்களில் இருக்கும் பெரியவர்கள் முதல் நகரங்களில் இருக்கும் பெரியவர்கள் வரை உறுதுணையாக இருந்தது.
சைக்கிள் ரிக்ஷா
கையால் இழுக்கும் ரிக்ஷாவை ஒழித்தார். இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்க திட்டம் வகுத்தார். குடியிருப்பு சட்டம் வகுத்தார். வாடகை நிர்ணயம் செய்தார். இது நகரங்களில் குடியேறியவர்களுக்கு உதவியாக இருந்தது.
பிற்படுத்தப்பட்டோர்
இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான் தனி துறை அமைத்தார். அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கினார்.
இலவச கல்வி
முக்கியமாக அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 % ஆக இடஒதுக்கீட்டை உயர்த்தினார். P.U.C வரை இலவச கல்வி வழங்கினார். மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்தார்.
பசுமை புரட்சி
கோவையில் முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கினார். தமிழகத்தில் இதன் மூலம் ஒரு பசுமை புரட்சியை உருவாக்கினார். அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் கொண்டு வந்தார். அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தார்.
மீனவர்கள்
மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் கொண்டு வந்து, கோவில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் கொண்டு வந்தார்.
நிலக்கரி மின் உற்பத்தி
சேலத்தில் இரும்பு தொழிற்சாலை அமைத்தார். இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தியை நெய்வேலியில் கொண்டு வந்தார். பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடியில் அமைத்தார். சிட்கோ, சிப்காட் உருவாக்கினார். பூம்புகார் கப்பல் நிறுவனம் கொண்டு வந்தார்.
கொங்கு வேளாளர்
உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தார். பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தார். கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்து. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தார்.. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு அளித்தார். வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இளங்கலை வரை இலவச பட்டப்படிப்பு திட்டம் கொண்டு வந்தார்.
16 லட்சம் விவசாயிகள்
இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அறிமுகம் செய்தார். 1990ல் பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் அறிவித்தார். இதனால் சுமார் 16 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர். இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிமுகம் செய்தார். இதனால் தமிழகத்தில் விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது. இதைத்தான் பின்னர் பல மாநிலங்களும் பின்பற்றின.
30 % இடஒதுக்கீடு
சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு என்று கொடுத்தார். ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், விதவைகளுக்கு மறுமண நிதி உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், பெண்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றை கொண்டு வந்தார். இதற்கு பெண்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. அவர்களது சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
விதவைப் பெண்கள்
உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்தார். இரண்டு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் சட்டம் கொண்டு வந்தார். முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தார். பெண்கள் சுயமாக நிற்க வேண்டும் என்பதை அன்றே தீர்க்கமாக அறிந்து செயல்பட்டவர். விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவினார்.
ஊக்கத்தொகை
நேரடி நெல் கொள்முதல் மையம் திறந்தார். நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்து அறிவித்தார். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தார்.
பெரியார் பல்கலைகழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி, இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது, பெரியார் பல்கலைகழகம் நிறுவியது, உலக தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் கொண்டு வந்தது கல்வியில் இவர் புகுத்திய சாதனைகள்.
சென்னை நகரம்
மெட்ராஸ், சென்னையாக்கியது, 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது, தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு, சமத்துவபுரம், கிராமங்களில் மினி-பஸ் சேவை, உழவர் சந்தை திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைத்தது என்று இவரது சாதனைகள் நீளுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையம்
சென்னையில் டைடல் பார்க் அமைத்தது, மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை, சென்னை கோயம்பேட்டில் மிகப்பெரிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது, 20 அணைகள் கட்டியது என்று தொலைநோக்கு பார்வையுடன் அனைத்தையும் செய்தார்.
சென்னை மெட்ரோ
மதுரை நீதிமன்றம் கட்டியது, இலவச பஸ் பாஸ் கொண்டு வந்தது, இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றது, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், நலிவுற்றவர்களுக்கு குடும்ப நல திட்டம், 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், இதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற்றது என்று எண்ணற்ற திட்டங்கள், சாதனைகளை கூறலாம்.
மூன்றாம் பாலினத்தவர்கள்
மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை என்று அழைக்க வேண்டும் என்று அறிவித்தவர். இதற்கு இன்றும் அவர்கள் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கு என்று முதன்முதலாக நலவாரியம் அமைத்து, அந்த நலவாரியத்தின் மூலமாக எண்ணற்ற நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார்.
ஏழைகளுக்கு உதவி
தமிழகத்தில் ஏழைகள் இலவச மருத்துவ வசதி பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் இன்றும் எண்ணற்ற ஏழைகள் பயன் பெறுகின்றனர். இது பின்னர் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் மாற்றம் செய்யப்பட்டது.