தியேட்டர்களில் 50% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு உத்தரவு.. கூடுதல் காட்சி காண்பிக்கலாம்
சென்னை: தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் இந்த விதிமுறை தளர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே நேரம் கூடுதல் காட்சிகள் காண்பிக்க அனுமதிக்கப்படுகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் இருந்து வருகிறது.
இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது இந்த அரசு. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோரிக்கை வந்தது
கடந்த 4.1.2021 அன்று தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு அனுமதி
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.
50 சதவீத இருக்கைகள்
தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கூடுதல் காட்சி ஓகே
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பொது மக்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசு கூறியுள்ளது.
மாஸ்டர், ஈஸ்வரன்
இதனிடையே, 50 சதவீதம் ரசிகர்களுக்குத்தான் அனுமதி என்பதால், விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய இரு படங்களுக்கு பதிலாக மாஸ்டர் படத்தை மட்டும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கூடுதல் காட்சியின் மூலம், போட்ட முதலீட்டை மாஸ்டர் படத்திற்கு திருப்பி எடுத்துவிடலாம் என்பது பட தயாரிப்பாளர்களின் திட்டமாகவும் உள்ளது.