ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தை மொத்தமாக புறக்கணித்த தமிழக அரசு.. பங்கேற்றவர்கள் யார் யார்?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் குடியரசு தின தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் என எவரும் அரசு சார்பில் பங்கேற்கவில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கிண்டி லோக் பவனில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு இன்று குடியரசு தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்து வருகிறார். இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்தன.
ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்பார்கள். ஆனால், இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர் என். ரவி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. ஆளுநர் உரையுடன் துவங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் துவக்க உரையை நிகழ்த்தாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநடப்பு செய்து வருகிறார். இந்த ஆண்டும் ஆளுநர் சட்டசபைக்கு வந்துவிட்டு, உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
இதையடுத்து, இன்றைய தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து இன்று மாலை ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளதாகவும் இந்த விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் என யாரும் பங்கேற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கிண்டி லோக் பவனில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் (Tea Party), தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் பாமக தரப்பில், எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், சதாசிவம், தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டும் ஆளுநர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த போதும் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனினும் இந்த ஆண்டு அரசும் புறக்கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications