தமிழகத்தில் ஜவுளி ஆலைகள் உள்பட 13 வகை ஆலைகள் இயங்க மாலையில் அளிக்கப்பட்ட அனுமதி இரவில் ரத்து
சென்னை: தமிழகத்தில் எஃகு, உரம், சிமெண்ட், சர்க்கரை ஆலை உள்ளிட்ட 13 வகையான ஆலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அந்த அனுமதியை வெறும் 3 மணி நேரத்தில் ரத்து செய்தது. அதாவது மாலையில் கொடுத்த அனுமதியை இரவில் ரத்து செய்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். தற்போதைய சூழலில் தமிழகத்தில் மருந்து கடைகள், காய்கறி சந்தைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
முன்பு பெரிய மளிகை கடைகள் இயங்கி வந்தன. இப்போது அதற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய மளிகை கடைகளுக்கு டோர் டெலிவரி செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காய்கறி கடைகளிலும் நடமாடும் காய்கறிகடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த கடைகளுக்கும் அரசு அனுமதி அளிக்கவில்லை. அனைத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
தெருக்களுக்கும் சீல் வைப்பு
தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க கிராமம் நகரம் என அனைத்து தெருவாரியாக சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மருந்து கடைகள், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு தவிர வேறு எதற்கும் தமிழகத்தில் தற்போது அனுமதி தரப்படவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தமிழக அரசு அனுமதி
ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக முடங்கி உள்ளது. வர்த்தகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எஃகு, சிமெண்ட், உரம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன ஆலைகள், சர்க்கரை ஆலைகள் , காகித ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 13 ஆலைகள் மட்டும் இயங்க நேற்று மாலை தமிழக அரசு அனுமதி அளித்தது.
மக்கள் குழப்பம்
இந்நிலையில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் மக்கள் கூட்டமாக மார்க்கெட்,மளிகை கடைகளுக்கு குவிந்ததால் சமுக இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்தே தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் எந்த அடிப்படையில் 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்தது என்று பல்வேறு தரப்பினரிடையே குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் வாகனங்களும், தொழிலாளர்களும் பணிக்கு திரும்பும் பட்சத்தில், கொரோனா தொற்று வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
அனுமதி ரத்து
இந்நிலையில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்த அரசாணையை தமிழக அரசு அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நேற்று இரவு 9.30 மணி அளவில் ரத்து செய்தது. இதன் மூலம் தமிழகத்தில் 13 வகை ஆலைகளுக்கு இயங்க அளிக்கப்பட்ட அனுமதி வெறும் 3 மணி நேரத்தில் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது,