அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2500 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை திடீர் ரத்து
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2500 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நாளை (செப்.4) முதல் விண்ணப்பிக்கலாம் அறிவிப்பாணை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்பில் தாவரவியல் (89), வேதியியல் (188), கணிணி அறிவியல் (137) , ஆங்கிலம் (309), புள்ளியியல் (56), விலங்கியல் (100), புவியியல் (68), வரலாறு (67), வணிகவியல் (102), கணிதம் (192), தமிழ் (231), இயற்பியல்(150), பொருளாதாரம் (92), எலெக்ட்ரானிக்ஸ் (26), கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ( 57), கார்ப்பரேட் கெக்ரட்ரிஷிப் (25), அரசியல் அறிவியல் (29) விஷூவல் கம்யூனிகேசன் (21) உள்பட பல்வேறு துறைகளில் சுமார் 2340 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இதன்படி https://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வழியாக விண்ணப்பிக்க பலர் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2500 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை ஒத்திவைத்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாகவும், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.