ஸ்டாலின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்கு.. விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது புகார் கூறப்பட்டது.
திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காக தலைமை செயலகத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது மேலும் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு பங்கு உள்ளது என சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார் ஸ்டாலின்
விரைவில் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பதவிகள் காலியாகும் இதை சொன்னால் என் மீது அவதூறு வழக்கு போடுவார்கள் முடிந்தால் போடட்டும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என சவால் விடுக்கும் வகையில் பேசியதாக தகவல் வௌியானது
ராகுலை பிரதமராக்க நினைத்த ஸ்டாலின்.! தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. தமிழிசை வலியுறுத்தல்
இதனையடுத்து தமிழக முதல்வர் சார்பில் ஸ்டாலின் மீது, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சதீஷ்பாபு ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு நீதிமன்றம், நாளை ஆஜராகுமாறு ஸ்டாலினுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு மனு தாக்கல் செய்தது.
அதில் முதலமைச்சர் குறித்து பேசியதற்காக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடரமுடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீமன்றம், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.