ஜெயலலிதா வேதா இல்லத்தில்.. 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி! அரசிதழில் வெளியான அரசுடமை உத்தரவு
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
2017 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றிய அறிவிப்பைமுதல்முறையாக வெளியிட்டார். மேலும் பொது மக்களின் பார்வைக்காக வேதா இல்லம் திறந்து விடப்படும் என்றும் அப்போது தெரிவித்தார்.
வேலும் மயிலும் முருகனாய் காட்சி தரும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் - வைரல்
வேதா இல்லம்
இதையடுத்து அந்த இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஆனால், வேதா இல்லம் தங்களுக்கு உரிமையானது என்றும், தாங்கள்தான் ரத்த சொந்தம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எனவே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் தாமதமானது.
போயஸ் கார்டன் வீடு
இதையடுத்து, கடந்த மே மாதம் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. வேதா இல்லம் நினைவு அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டு அதற்கு தமிழக முதல்வர் தலைவராக இருப்பார். துணை முதல்வர் உறுப்பினராக செயல்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு டெபாசிட்
ஆனால் அதற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஏனெனில் ஜெயலலிதா தரப்பில் 36 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதால் அவரது இல்லத்தை கையகப்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்தது. ஆனால் வேதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு தொகையாக ரூ 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இந்த இல்லத்திற்கு உரியவர்கள், தேவைப்பட்டால் இழப்பீடு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தீபா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது பற்றி இன்று தமிழக அரசின் அரசிதழ் வெளியாகி உள்ளது.
தங்கம், வெள்ளி
அதில் 601 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட 32 ஆயிரத்து 721 பொருட்கள், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 11 டிவிகள், 10 பிரிட்ஜ்கள், 38 ஏசி, 556 பர்னிச்சர் பொருட்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ளன. துணி, துண்டு, போர்வைகள், செருப்புகள் என 10 ஆயிரத்து 438 பொருட்கள் உள்ளன. ஜெயலலிதாவின் இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளது. இந்த தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.