18+ வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி.. 5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர்.. அசத்தும் தமிழக அரசு!
சென்னை: இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தினமும் 3,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
கொரோனாவை விரட்டுவதில் மக்களுக்கு மிகவும் கைகொடுத்து வருவது தடுப்பூசிகள். ஆனால் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
நேரடியாக கொள்முதல்
கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட இருந்த நிலையில் தடுப்பூசி பற்றாற்குறையால் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசியை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்த முடிவு செய்தன.
தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில்18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் உலக அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை(டெண்டர்) தமிழக அரசு கோரியுள்ளது.
ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கணும்
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் 5 கோடி தடுப்பூசிகளை, 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும். டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டெபாசிட் தொகையாக 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை
தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கொரோனாவை ஒழித்து கட்ட பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 'வார் ரூம்' ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,000-க்கு மேற்பட்ட பாதிப்புகளும், 303 உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.