ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது... தீபா, தீபக் வாரிசுகளாக அறிவிப்பு!!
சென்னை: சென்னையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது. நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அரசுடமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பீட்டுத் தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் வேதா இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலாக மாற்ற முடியாது. அதற்கான சத்தியக் கூறுகள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நினைவு இடமாக மாற்றுவதற்கு 2017ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசிகலா சிறைக்கு சென்றார்:
சென்னை, போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் இருக்கிறது. சுமார் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழி சசிகலா குடியிருந்து வந்தார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
பாட்டிக்கும் உரிமை உள்ளது
இதையடுத்து அந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆனால், அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவர்கள் இருவர் இருப்பதாகவும், தங்களது பாட்டிக்கும் அந்த சொத்தில் உரிமை இருப்பதால் தங்களுக்கு கோருவதற்கு உரிமை இருக்கிறது என்றும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர்.
வருமான வரி பாக்கி:
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு இழப்பீடாக ரூ. 67.9 கோடியை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கியான ரூ. 36.9 கோடியையும் அரசே செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வளர்ச்சித்துறை:
வேதா இல்லத்தை கையகப்படுத்த 5.10.2017 அன்று தமிழக வளர்ச்சித்துறை நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து இருந்தது. இதையடுத்து, நிலம் மற்றும் இல்லத்தைக் கைப்பற்ற பூர்வாங்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர் இதற்கான உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டது.
அசையும் சொத்து:
இதைத் தொடர்ந்து இல்லம் மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமை செய்வது என்றும், 'வேதா நிலையம்' இல்லத்தை 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' என மாற்றுவதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து இருந்தார்.
முடிவு இல்லை ஆரம்பம்:
வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று ஜெயலலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் தற்போது நடக்கும் செயல்களை வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களது தனி உரிமைகளை எடுத்து அரசுடமை செய்யக் கூடாது. எங்களது பாட்டியின் உரிமையும் இதில் கலந்துள்ளது. ஜெயலலிதா எங்களது குடும்பத்தில் ஒருவர் என்று தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
தீபா, தீபக் வாரிசுகள்:
ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர்கள் இருவரும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், வேதா இல்லத்தை உடமையாக்கிக் கொள்ளவே தீபா விருப்பம் தெரிவித்து வருகிறார்.