தலைநகர் சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தீவிர நடவடிக்கை
சென்னை: தமிழகத்தில் தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதற்கு லட்சக்கணக்கானோர் வாழும் தலைநகர் சென்னையும் விதிவிலக்கில்லை.
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும், கோடையை சமாளிக்க அது போதுமானது அல்ல. பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்கள் வாழும் சென்னையில், குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, குடிநீர் தேவையும் சென்னையில் அதிகரித்து காணப்படுகிறது. சராசரியாக சென்னை மக்களின் ஒரு நாளைய குடிநீர் தேவை 83 கோடி லிட்டராக உள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி புழல் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வற்றி காணப்படுகின்றன இந்நிலையில் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
ஏற்கனவே 6 லட்சத்து 73 ஆயிரத்து குடிநீர் இணைப்புகள் மூலமும், இதுதவிர 24 ஆயிரத்து 712க்கும் அதிகமான தெருக்குழாய்கள் மூலமாகவும் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நெம்மேலி மற்றும் மீஞ்சூரிலிருந்து சென்னைக்கு ஒருநாளைக்கு தலா 100 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவரப்படுகிறது.
கல்குவாரியில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து, மக்களின் தேவைக்கு பயன்படுத்தலாமா என்று ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் அந்நீரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது இதையடுத்து குன்றத்தூரை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 25 கல்குவாரிகளில் இருந்து, 200 மில்லியன் கன அடி நீர் தேக்கிவைக்கப்படுகிறது.
இந்த நீர் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மற்றும் மிதவை இயந்திரம் மூலம் அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு நீர் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாளைக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரி ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.