சின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்
சென்னை: அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 20 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்று விதித்திருந்த விதிமுறை இதன்மூலம் தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை இழந்து கடும் இன்னலுக்கு ஆளாவதாக கூறி முதல்வரை சந்தித்து சின்ன துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த 21ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்பு துவங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியிருந்தார்.
இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்
முதல்வர் அறிவிப்பு
அதிகபட்சம் 20 பேர் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மறுபடியும் சின்னத்திரை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறி உள்ளதை பாருங்கள்: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு மே மாதம் 21 ஆம் தேதி அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டேன்.
படப்பிடிப்பு பிரச்சினை
அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், செய்தித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
செய்தித்துறை அமைச்சர்
அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர், என்னுடன் கலந்து ஆலோசித்தார். மேற்படி சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை மே மாதம் 31-ஆம் தேதி முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.
Recommended Video
அனுமதி
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழு படப்பிடிப்புக்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்துகொண்டு, படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது.