பேரறிவாளன் பரோலை நிராகரித்த தமிழக அரசு - செப்டம்பர் 8ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பரோல் கேட்ட பேரறிவாளன் மனுவை தமிழக அரசும் நிராகரித்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பேரறிவாளன் பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோல் நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் விடுப்பு வழங்க முடியாது என மீண்டும் தெரிவித்திருந்தார்.
அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ம் தேதி சிறைத்துறை ஐ.ஜி நிராகரித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
செமஸ்டர் கட்டணம் கட்ட அண்ணா பல்கலை கெடு: மாணவர் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.