பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும்.. ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பிளாஸ்டிக் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், மேற்கண்ட அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி 1 முதல் அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக புகார் கூறினர்.
இந்த வழக்கில் வாதிட்ட தமிழக அரசு 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும் வாதிட்டது.
'ஒரே நாடு' கோஷங்களால் தேசத்தின் நிலை என்னவாகும்? மவுனித்த மாநில கட்சிகள்!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என கூறினர்.
எனவே 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் தடை விதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னதாக தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்தது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூனில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு மாற்றாக 14 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டது பின்னர் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.