தேசிய கல்வி கொள்கை வரைவை கண்டித்து எதிர்ப்பு இயக்கம்.. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் முடிவு
சென்னை: தேசிய கல்வி கொள்கைக்கான புதிய வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சங்க கூட்டத்தில், 2019-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழிவகுக்கும் இந்த வரைவு ஆவணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்ப்பு இயக்கம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கானவரைவு ஆவணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21-ம் தேதி எதிர்ப்பு இயக்கம் நடைபெறும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய வரைவு கல்வி கொள்கை என்பது அடிப்படையில் சமூக நீதிக்கு எதிரானது. மாநில அரசினுடைய உரிமைக்கு எதிரானது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை மையப்படுத்தியது என்றே தாங்கள் கருதுவதாக, மதுரை தொகுதி எம்.பி-யும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
செய்தியளர்களிடம் பேசிய அவர் மருத்துவப் படிப்பு மற்றும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் என பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் அளவுக்கு, புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு 3 வயதில் இருந்தே கட்டாய கல்வியை புகுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் பல உலக நாடுகளில் கூட 7 வயதுக்கு பிறகே கட்டாய கல்வி சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து, தேசிய கல்வி கொள்கை வரைவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இது மாதிரி கல்விக் கொள்கையின் வரைவின் அடிப்படை விஷயங்களிலேயே பல முரண்பாடுகள் இருக்கின்றன என்று கடுமையாக சாடினார்.
ஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்!
எனவே தேசிய கல்வி கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். வரும் 22-ம் தேதி டெல்லியி மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்குபெற உள்ள தமிழக கல்வி அமைச்சர் இந்த வரைவு கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். தேசியகல்வி கொள்கை வரைவை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பதும் எழுத்தாளர்களின் கோரிக்கை.
மேலும் புதிய கல்விக் கொள்கை வரைவில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.