கொரோனாவுக்கு தமிழக அரசு இதுவரை செய்த செலவு ரூ7,167.97 கோடி - துணை முதல்வர் ஓபிஎஸ்
கொரோனாவுக்கு தமிழக அரசு இதுவரை ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளதாக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனாவுக்கு தமிழக அரசு இதுவரை ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளதாக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் நிவாரண தொகைக்கு ரூ.4,896.05 கோடியும், தனிமைப்படுத்தலுக்கு ரூ262.25 கோடியும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ.830.60 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா காலப் பேரிடர் நியமனங்கள், கொள்முதல் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிகிச்சை நிதி 2 லட்சம் ரூபாய், உயிர்த் தியாகத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
ஒட்டுமொத்தமாக கொரோனாவைக் கையாளுவதில் இந்த அரசு படுதோல்வி அடைந்து நிற்கிறது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், கொரோனா மேலாண்மையிலே தோற்று ஐந்து லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் - தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் படுமோசமாகும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா தடுப்பு பணியில் உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், இறந்தோர், கொரோனா பேரிடருக்கு மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கொரோனாவால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை முதல்வர் சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் உரிமையை பெற்று தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கும் இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது என்றார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள்-7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு செலவு செய்த தொகைகள் குறித்து விளக்கம் அளித்தார். கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். தொழிலாளர்கள் நிவாரண தொகைக்கு ரூ.4,896.05 கோடியும் , தனிமைப்படுத்தலுக்கு ரூ262.25 கோடியும்,மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ.830.60 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து அவர், மருத்துவ கட்டுமான பணிக்கு ரூ147.10 கோடியும்,கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ரூ.638.85 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.243 கோடி ஒதுக்கப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள செலவுகள் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.