கிறிஸ்துமஸ் பண்டிகை.. தமிழக ஆளுநர்.. முதல்வர் பழனிச்சாமி, முக ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: நாளை (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஏசு கிறிஸ்து அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதியான நாளை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
நாளை அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர்
கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது. அது மட்டுமின்றி குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லுறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திட வழிகாட்டுவதாகும். இப்பண்டிகை, அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம். உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர்
திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்பும், அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவர்க்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார்
வாழ்வுரிமை கட்சி
அன்பு, நன்மை, மன்னிப்பு ஆகிய இவையே கிறிஸ்து இயேசு அல்லது கிறிஸ்தவம். நாம் இயேசுவைத் தரித்துக் கொள்வோம்; இயேசுவாகவே வாழ்ந்து புதிய இனிய நீடிய நிலைத்த நல்வாழ்வினைப் பெறுவோம் என நாடுகளின் மக்களுக்கெல்லாம் உரைப்போம்.உலகிற்கோர் இனிய நற்செய்தி கிறிஸ்து இயேசுவின் பிறப்பு! அந்தக் கிறிஸ்துமஸ் நன்னாளில் மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்தினைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.