'தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர், மக்களின் முதல்வர் கருணாநிதி..' ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்
சென்னை: தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர் கருணாநிதி என்ற புகழாரம் சூட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திய மக்களின் முதல்வர் என்றும் பாராட்டியுள்ளார்,
தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
11-வது உலகத் தமிழ் மாநாடு: திருச்சியில் நடத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு சட்டசபை
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த முக்கியமான நாளில் சட்டசபைக்கு தங்கள் முக்கிய பங்களிப்பை அளித்த அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றியதில் இவர்களின் பங்கு முக்கியமானது. இந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபை மெட்ராஸ் சட்டசபை என்ற பெயரில் 1921ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் சட்டசபையே பின்தங்கியவர்களுக்கும் பெண்களும் வாய்ப்பை அளிக்கும் வகையில் செயல்பட்டது.
பல முக்கிய தலைவர்கள்
தமிழ்நாடு சட்டசபை பனகல் அரசர், ராஜாஜி, டி பிரகாரம், காமராஜர்,பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எனப் பல தலைவர்களைக் கண்டுள்ளது. இந்தியாவின் முதல் சட்டசபை உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாடு கண்ட மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி என் அண்ணாதுரை. மிகச் சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட அண்ணாவின், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற வாசகம் புகழ்பெற்றது. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றியவர் அண்ணா.
மண்ணின் மைந்தர்
இந்தியாவிலேயே பழமையான சட்டசபை என்ற சிறப்பை தமிழ்நாடு சட்டசபை பெற்றுள்ளது. சமூக நீதியை வென்றெடுக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும், பெண்கள் வாழ்வை முன்னேற்றவும் கல்வியை மேம்படுத்தவும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமையை உறுதி செய்வது எனப் பல முக்கிய சட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவராகவும் தனித்துவம் மிக்கவராகவும் திகழ்ந்தவர். தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தரான கருணாநிதியின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது.
தோல்வியைச் சந்திக்காதவர்
இந்தியாவில் இருக்கும் பழைமையான சட்டசபைகளில் தமிழக சட்டசபையும் ஒன்று. தமிழ்நாட்டிற்கு 5 முறை முதல்வராக இருந்து, தேர்தலில் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காதவர். கை ரிக்ஷாவுக்கு, பதில் சைக்கிள் ரிக்ஷா, குடிசைக்குப் பதிலாகக் குடியிருப்புகளை வழங்கியவர். 14 வயதில் அரசியலில் நுழைந்த கருணாநிதி, 13 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1957ஆம் ஆண்டு முதல் தான் உயிரிழக்கும் வரை சட்டசபையில் உறுப்பினராக இருந்தவர்.
சட்டங்கள்
பல துறைகளிலும் தனித்துவம் மிக்க அறிவுடன் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம். கை ரிக்ஷாவுக்கு பதில் சைக்கிள் ரிக்ஷா வழங்கிய திட்டம், குடிசை மாற்று வாரியம், பெண்களுக்குச் சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச டிவி, தீண்டாமை கொடுமையை ஒழிக்கச் சமத்துவபுரம், இலவச கேஸ் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்திய மக்களின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.
Recommended Video
முன்னுதாரணமாக இருந்தவர்
70 ஆண்டுக் காலம் அரசியலில் இருந்த கருணாநிதி இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர் கருணாநிதி. மற்ற சட்டசபை உறுப்பினர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தவர். கடந்த 2017இல் கருணாநிதியைப் பிரதமர் மோடி சந்தித்தார். அந்த வரலாற்று முக்கியமான சந்திப்பில் நானும் உடன் இருந்தேன். 16ஆவது தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ளார். இருப்பினும், அனைவரும் பொதுமக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும்" என்றார்.