பதவியேற்ற முதல் நாளே அதிரடி.. மரபை தாண்டி, செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி.. அரிதான நிகழ்வு!
சென்னை: தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Recommended Video
இதன்பிறகு ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவனிக்கத்தக்க அம்சம் ஒன்று இருந்தது.
பொதுவாக ஆளுநர்கள் செய்தியாளர்களை சந்திப்பது மரபு கிடையாது. அந்த வகையில் முதல் நாளே மரபை தாண்டி செய்தியாளர்களை சந்தித்துள்ளார் ரவி.
8-வது வரிசையில் தனிமையில் அமர்ந்த எடப்பாடி.. ஆளுநர் ரவிக்கு அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
மரபை தாண்டி சந்திப்பு
பதவியேற்றுக் கொண்ட முதல் நாள் என்பதால் அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்கிறார்கள். ஆனால் வருங்காலங்களில் அப்படி மரபை மீறி செய்தியாளர்களை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், கடைசியாக, முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2018ம் ஆண்டு, செய்தியாளர்களை சந்தித்தார். பிறகு சந்திக்கவில்லை. மிக அரிதாகத்தான் செய்தியாளர்களை ஆளுநர்கள் சந்திப்பார்கள்.
பன்வாரிலால் புரோகித் பிரஸ் மீட்
துணை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் வெடித்து கிளம்பிய நேரம் அது. எனவே அதுபற்றி பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்தார். தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று ஆளுநர் அப்போது விளக்கம் அளித்தார்.
சர்ச்சையான சந்திப்பு
இதனிடையே, பெண் செய்தியாளர் கன்னத்தில் ஆளுநர் கை வைத்ததாக இந்த செய்தியாளர் சந்திப்பில்தான் சர்ச்சை எழுந்தது. வீட்டுக்கு வந்து பல முறை முகத்தை சோப்பு போட்டு கழுவினேன் என்று பெண் பத்திரிக்கையாளர் தெரிவித்ததும் அப்போதுதான். இப்படியான சர்ச்சைகளுக்கு பிறகு ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
பன்வாரிலால் மாதிரி செயல்படுவீர்களா என கேள்வி
அந்த மரபை தாண்டி இன்று புதிய ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதை போல நீங்களும் நடத்துவீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. சில நிமிடங்கள் முன்புதான் பதவியேற்றுள்ளேன். வருங்கால நடவடிக்கைகள் குறித்து இப்போது பதிலளிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை
அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்; என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் ஆளுநர் ரவி இந்த பேட்டியின்போது உறுதியளித்தார்.
காங்கிரஸ் புறக்கணிப்பு
ஆளுநர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. ஆளுநராக ரவி நியமனம் செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் அழகிரி எதிர்த்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில்தான் முதல் நாளே அதிரடியாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் ஆளுநர் ரவி.