பன்வாரிலால் மாதிரி செயல்படுவீர்களா? தமிழக அரசு செயல்பாடு எப்படி? சரமாரி கேள்விகள்.. ஆளுநர் பதில்
சென்னை: தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்ற பிறகு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Recommended Video
ராஜ்பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பிறகு ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்தார். அப்போது நிருபர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
பதவியேற்ற முதல் நாளே அதிரடி.. மரபை தாண்டி, செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி.. அரிதான நிகழ்வு!
நிறைய கேள்விகள்
குறிப்பாக, ரவி முன்னாள் உளவுத் துறை அதிகாரி என்பதால், அவரை தமிழக ஆளுநராக நியமித்ததில் உள் நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி சந்தேகம் வெளிப்படுத்தியதையொட்டி நிறைய கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
வணக்கம் என கூறிய ஆளுநர்
பொதுவாக ஆளுநர்கள் செய்தியாளர்களை சந்திப்பது மரபு கிடையாது. அந்த வகையில் முதல் நாளே மரபை மீறி செய்தியாளர்களை சந்தித்தார் ரவி. "வணக்கம்" என்று தமிழில் தெரிவித்து தனது செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார் ஆளுநர் ரவி. உலகின் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் கலாச்சார செழுமை மிகுந்த தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒட்டுமொத்த நாடும், தமிழ்நாட்டின் ஆன்மீகம், அறிவியல், கலை ஆகியவற்றால் பலன் பெற்றுள்ளது. எனது முழு திறமையை பயன்படுத்தி, கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார் ஆளுநர்.
சவால் பொறுப்பு
தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு உங்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, நான் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் (நிருபர் தமிழில் கேள்வி எழுப்பிய நிலையில் இவ்வாறு ஆளுநர் குறிப்பிட்டார்). சவால் என்பதை விட பத்திரிக்கையாளராக நான் பணியாற்றியிருந்த அனுபவம் நல்ல வாய்ப்புகளை தரும் என்றுதான் நம்புகிறேன் என்றார்.
ஆய்வுக் கூட்டங்கள்
முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். அதுபோல நீங்களும் நடத்துவீர்களா மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, சில நிமிடங்கள் முன்புதான் நான் பதவியேற்றேன். எனவே அடுத்த கட்ட திட்டங்களை பிறகுதான் வெளிப்படுத்த முடியும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கும் இடம். நிர்வாகம் என்பது அரசின் பணிதான். ஆளுநர் என்பது, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அதை எனது மனதில் வைத்து நான் செயல்படுவேன்.
சிறப்பாக செயல்படும்
தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை இப்போதே தெரிவிப்பது முதிர்ச்சியற்ற பதிலாகத்தான் இருக்க முடியும். ஆனால், கொரோனா பரவலை, தமிழ்நாடு அரசு கையாண்ட விதம் நன்றாக இருந்தது. தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.
உள்நோக்கம்
மத்திய உளவுப் பணியில் நிபுணத்துவம் பெற்ற நீங்கள், தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்பதில் உள்நோக்கம் இருக்கிறது என சில கட்சிகள் தெரிவித்தன. அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வருங்காலத்தை எவ்வளவு அழகாக்க முடியுமோ அவ்வளவு அழகாக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கம் என்று பதிலளித்தார்.