தமிழகத்தில் மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை.. வனத்துறை அதிரடி
சென்னை: கோடைகாலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தமிழகத்தின் மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்லக்கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐடி பணியாளர்கள் காட்டுத்தீயில் சிக்கினார்கள். இந்த விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குபிறகு குரங்கணியில் மலையேற்றத்திற்கு வனத்துறை தடை விதித்தது. அத்துடன் தமிழகம் முழுவதுமே மலையேற்றத்திற்கு சிறிது காலம் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன் மலை, களக்காடு முண்டந்துறை, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சைமலை உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கான தனி பாதைகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் வனத்துறையின் அனுமதியுடன் மலையேற்ற பயிற்சிக்கு மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், மலைப்பகுதிகளில் பரவலாக காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழகம் முழுவதும் மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.