பஸ் ஸ்டிரைக்.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு
சென்னை: பேச்சுவார்த்தைக்கு இதுவரை அரசு அழைக்காத நிலையில், பஸ் ஸ்டிரைக் தொடரும் என்றும், இனி போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என்றும் சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதன்படி இன்று காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் அரசு பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து சேவைகளை மட்டுமே நம்பியுள்ள பல கிராமங்கள் மற்றும் நகர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த பேருந்துகளே இயங்குவதால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோரிக்கைகள் வைப்பு
இந்நிலையில் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தைக்கு முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையை தொடர்ந்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேரில் சந்தித்து மீண்டும் தங்களது கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.
1000 போதாது
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், போக்குவரத்து அமைச்சர் நேற்று அறிவித்த 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. 1.9.2019 அன்றே 14வது ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று அரசு சொல்ல வேண்டும். அரசு பேருந்துக்கு பதில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தகூடாது. பள்ளி வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அரசு பேருந்துகளுக்கு பயன்படுத்த கூடாது.
போராட்டம் தீவிரம்
தற்போது வரை 20% பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது.. ஒப்பந்தம் முடிந்து 168 மாதங்கள் ஆகியும் எங்களை அழைத்து பேச வில்லை இது அரசுக்கு நல்லதல்ல. அனைத்து இடங்களிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.அண்ணா தொழிற்சங்கத்திலும் 90% பேர் வேலை நிறுத்தத்தை செய்கின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை தடுக்க அரசு முயற்சித்தால் சாலை மறியல் மற்றும் போராட்டம் போன்று அடுத்த கட்ட நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவோம்.
பேச்சுவார்த்தை
கடந்த வேலை நிறுத்தத்தில் 3 அமைச்சர்கள் உட்பட கைப்பட எழுதி கொடுத்தார்கள். அரசு எங்களை ஏமாற்றி வருகிறது. போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகளை அரசு தான் சரிப்படுத்த வேண்டும் .அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும், மாறாக வேலை நிறுத்தத்தை தடுப்பதை தவிரித்து போராட்டத்தை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்" இவ்வாறு சௌந்தரராஜன் கூறினார்.