இனி தமிழில் ஊர்ப் பெயர்களைப் பார்க்கலாம்.. சென்னை சாலையின் பெயர் மாறியது!
Recommended Video
சென்னை : தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஊர், நகர், தெருப் பெயர்களை தமிழுக்கு மாற்றத் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக சென்னையில் ஒரு சாலையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள முக்கியமான பல ஊர்கள், மாவட்ட தலைநகரங்களின் பெயர்கள் இனி மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்த அவர், விரைவில் அது தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது பெயர் மாற்றம் தொடர்பான பணிக்காக 32 மாவட்டங்களிலும் உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றம் செய்யவேண்டிய ஊர்களின் பெயர்களையும், இனி எவ்வாறு அந்த ஊர்களின் பெயர்கள் இருக்கவேண்டும், அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தற்போது 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் மாற்றப்பட இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசும் தொடங்கி உள்ளது. இந்த முடிவின் படி சென்னையில் உள்ள ட்ரிப்பளிகேன் என்பது திருவல்லிக்கேணி என்று மாற உள்ளது.
அதே போல, திருச்சி என்பது திருச்சிராப்பள்ளி என்றும், டுட்டிகொரின் என்பது தூத்துக்குடி என்றும் மாற்றப்படுகிறது. சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி, இனி பூவிருந்தவல்லி என்று மாறுகிறது.
சென்னையில் உள்ள பிரேசர் பிரிட்ஜ் சாலை என்பது தற்போது தமிழில் தேர்வாணையச் சாலை என்றும் ஆங்கிலத்தில் டிஎன்பிஎஸ்சி சாலை என்றும் மாற்றப்பட்டுள்ளது.